தூத்துக்குடி:  திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 12நாள் நடைபெறும் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாலகமாக தொடங்கியது. ஆவணி திருவிழாவையொட்டி, பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று காலை  கோலாகலமாக கொடியேற்றத்துடன்  தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செப்.2இல் நடைபெற உள்ளது.

ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. இதனையொட்டி, திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் வைத்து கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் யானை தெய்வானை மேல் கொடிப்பட்டமானது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

இதையடுத்து,  வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை என இருவேளை களிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர்.

ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 30ம் தேதி சிவப்பு சாத்தியும், 31ம் தேதி பச்சை சாத்தியும் நடைபெறுகிறது. ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 24ஆம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.

மாலை வேளையில் அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லாக்கில் 9 சந்ததிகளின் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 28ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு மேல கோயிலில் இரவு 7:30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி காலையில் கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வருதல், 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 8:45 மணிக்கு சுவாமி சண்முக பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் தரிசனத்துடன் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சப்பரம் சேருகிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை 4:30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வலம் வந்து மேலகோயில் சேர்கிறார். 8வது திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று காலை 10:30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில், சாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை வந்தடைகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 6:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. மேலும், ஆவணி திருவிழாவை முன்னிட்டு வரும் 24இல் கொடியேற்றம் மற்றும் ஆகஸ்ட் 30இல் 7ம் திருவிழா அன்று அதிகாலை 1 மணிக்கும், ஆகஸ்ட் 25ஆம் தேதி 2ம் திருவிழா அன்று அதிகாலை 3 மணிக்கும், மற்ற நாட்களில் அதிகாலை 4 மணிக்கும் கோயில் நடை திறக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.