கொழும்பு:
நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தான் பேசியதாகவும், நெருக்கடியான இந்த தருணத்தில் இந்தியா உதவி வருவதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ரணில், புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளவும் இலங்கையின் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

சர்வதேச கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்து வருவது குறித்தும், சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருவது குறித்தும் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.