தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூர், அருள்மிகு ராமநாதர் ஆலயம்.

தலபெருமை:

ராமநாத சுவாமியாய் சிவபெருமானும், பர்வதவர்த்தினியார் அம்பாளும் அலங்கரிக்கும் திருநரையூர் ஆலயத்தில் முக்கிய சிறப்புடன் விளங்குகிறார் சனீஸ்வரர்.

சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடன் இவ்வாயலத்தில் அருள்பாலிக்கிறார்.

நவகிரக மேடையின் நடுவில் இருக்கும் சூரியனும் தன் மனைவியர் உஷாதேவியுடனும், பிரத்யுஷா தேவியுடனும் காட்சி அளிக்கிறார்.

தம்பதி சமேதராய் மட்டுமல்ல. இவ்வாலயத்தில், சனீஸ்வரர் தனது மகன்களுடன் (குளிகன், மாந்தி) குடும்ப சமேதராய் அருள்புரிகிறார்.

தல வரலாறு:

தசரத சக்ரவர்த்தி தன் நோய் தீர, இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டிருக்கிறார்.

ராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார்.

கூடவே இவ்வாலய சிறப்புணர்ந்து அனுமனும் சிவ வழிபாடு செய்திருக்கிறார். அதற்கு சான்றாக இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது அனுமந்த லிங்கம். இவையெல்லாம் இவ்வாலயம் குறித்த புராணகாலச் சிறப்புகள்.

திருவிழா:

பவுர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம்

தல சிறப்பு:

சனி பகவான் தன் குடும்ப சமேதராக காட்சியளிப்பது சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மூலவருக்கு இல்லாத கொடிமரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு, பலிபீடமும், காகவாகனமும் கொண்டது சனீஸ்வரின் சன்னதி.

பிரார்த்தனை:

சனி தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

சிறப்பம்சம்:

சனி பகவான் தன் குடும்ப சமேதராக காட்சியளிப்பது சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

அமைவிடம்:

கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் அமைந்துள்ளது.