சென்னை: வடலூரில் நாளை மறுதினம் (பிப்ரவரி 10ந்தேதி) தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ந்தேதி தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் அவதரித்தவர். இவர் பசிப்பிணியை தீர்க்க வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவினார். மனத்தூய்மையும், தீய குணங்களும் நீங்கிய மனிதன் ஜீவகாருண்யச் செயல்களால் இறை நிலை அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு.
ஜாதிமத பேதமின்றி, ஏற்றத்தாழ்வு இல்லாது, எல்லா உயிர்களிடத்தும் அன்பை முன்னிலைப்படுத்திய ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து அதனையே தனது அமைப்பாக அறிவித்தார். ஞானசபையானது ஜாதி மதம் கடந்த உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வு அற்ற கொலை, புலால் தவிர்த்தவர்கள், மனிதநேயமும், அன்பு உள்ளமும் கொண்டவர்கள் கூடி உருவம் இல்லாத ஜோதி தீப வடிவமாக இருக்கிற இறைவனைத் தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடமாகும்.
வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞானசபையில் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் 7 திரைகள் உள்ளன. அவை 1. கருப்பு 2. நீலம் 3. பச்சை 4. சிவப்பு 5. பொன்மை 6. வெண்மை 7. கலப்பு நிறம் கொண்டவை. தைப்பூசத் திருவிழாவின்போது 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை காண சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனத்தை, மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாத பூச நட்சத்திரத்தன்று ஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு 154வது ஆண்டு தைப்பூச விழா நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தர்ம சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூரில் தண்ணீரால் விளக்கு எரித்த நற்கருங்குழியிலும் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெறும்.
பின்னர் ஞான சபையில் காலை 10 மணிக்கு கொடி ஏற்றப்படும். இதனைத் தொடர்ந்து இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை திருஅருட்பா கருத்தரங்கம் நடைபெறும்.
பிப்ரவரி 11ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மறுநாள் புதன்கிழமை காலை 5.30 மணி என 6 காலம், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பெருந்திரளாக வர உள்ளனர். இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. தைப்பூசவிழாவிற்கு ஒருநாள் இடைவெளிக்கு பின் பிப்ரவரி 13ம் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் திரு அறை தரிசனம் நடைபெறும்.
தைப்பூசம் விழாவை முன்னிட்டு, பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், நடத்தும் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. மேலும் ஜோதி தரிசனம் காண வரும் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு ஒருவழி பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் அழகானந்தன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார், அறங்காவலர்கள், வள்ளலார் தெய்வ நிலைய பணியாளர்கள் மற்றும் வடலூர், பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, சி.வெ.கணேசன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், அந்த பகுதியில் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரத்யேக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து சிறிய வாகனங்கள் மூலம் தெய்வ நிலையத்திற்கு பக்தர்களை அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 24 மணி நேர மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றவும், தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் இருக்கவும், காவல்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் சத்திய ஞான சபையில் வர்ணம் பூசும் பணிகள், மின் விளக்குகள், பக்தர்கள் தங்குவதற்கான மேற்கூரை அமைத்தல், பெருவெளி வளாகம் முழுவதும் மரக்கிளைகள் அகற்றுதல், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தீவிரமாக அறநிலையத்துறை மற்றும் வடலூர் நகராட்சி சார்பிலும் நடைபெற்று வருகிறது.