ராமநாதபுரம்: தை அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம்  ராமநாதசுவாமி கோவில் நடை நாளை முழுவதும்  பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

தை அமாவாசையை முன்னிட்டு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், திதி கொடுக்கவும் பல லட்சம் பேர் நாளை ராமேஸ்வரம் வருகை தருவார்கள்.  அவர்கள் நாளை (புதன்கிழமை) ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்வார்கள்.

 இதையொட்டி கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் கடலில் புனித நீராடவும் தீர்த்தக் கிணறுகளில் நீராடி மற்றும் சாமி தரிசனம் செய்யவும் வசதியாக  தேவையான நடவடிக்கைகைள் எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பல இடங்களிடல்  தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து கோவிலின் ரதவீதி சாலையிலும் போலீஸ் சார்பிலும் தடுப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பக்தர்கள் வழிபாடு செய்யும் வகையில்,  ராமேசுவரம் கோவிலில் நாளை முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.

நாளை  நாளை அதிகாலை 4 மணி அளவில்  திறக்கப்படும் கோயில் நடை  மதிய இடைவேளைக்கு அடைக்காமல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது நாளை, தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் பூஜை நடக்கிறது. தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறுகின்றது. வழக்கமாக பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். அமாவாசை என்பதால் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.