சென்னை: காகிதம் விலை மற்றும் அச்சுக் கூலி உயர்வு காரணமாகவே பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது  என பள்ளிக்கல்லவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தள்ளார்.

 தமிழகத்தில் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.340 வரை உயர்ந்துள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550-க்கு விற்பனையாகிறது. 2-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530-க்கு விற்பனையாகிறது. 3-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620-க்கு விற்பனையாகிறது. 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650-க்கு விற்பனையாகிறது. 5-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனையாகிறது. 6-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200 விற்பனையாகிறது. 8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000 உயர்ந்துள்ளது. 9-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 10-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1,130க்கு விற்பனையாகிறது. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு முன்னறிவிப்பு இன்றி அமல்படுத்தப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், காகிதம் விலை, மேல் அட்டை விலை மற்றும் அச்சுக் கூலி உயர்வு காரணமாகவே பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது. லாப நோக்கத்திற்காக அல்ல அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது  என குறிப்பிட்டுள்ளார்.