சென்னை: டாஸ்மாக் ரெய்டு குறித்து தகவலை உயர் அதிகாரிகளுக்கு  தெரிவித்துவிட்டே  சோதனை தொடங்கப்பட்டது என்றும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும்,   நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  கூறியுள்ளது.

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் நேற்றைய (ஏப்ரல் 17ந்தேதி) விசாரணையின்போது,   டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்த வழக்குகள் மீதான தொடர் விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக போலீஸாரால் பதியப்பட்ட 41 எப்ஐஆர்-கள் மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இசிஐஆர் விவரங்களையும், சோதனை தொடர்பான விவரங்களையும் அறிக்கையாக சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

இ;நத வழக்கின் விசாரணையின்போது,  தமிழ்நாடு அரசு பொய்யான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. சோதனையின்போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை எனவும், டாஸ்மாக் உடமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை என்றும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது. எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை முறையாக தெரிவித்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது ஆதாரபூர்வமாக கண்டுபிடிகப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில்,  டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரியும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகி, “அமலாக்கத் துறை எப்போதுமே வெளிப்படையாக இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் துறையாகத்தான் இருந்து வருகிறது. அதன் விசாரணையில் ஒருபோதும் வெளிப்படைத்தன்மை இருந்தது இல்லை. டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலமாக தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே அமலாக்கத் துறை இவ்வாறு செயல்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி 2021 வரை பதிவான வழக்குகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்கிறோம் எனக் கூறும் அமலாக்கத்துறை இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது? இன்று டாஸ்மாக், நாளைக்கு எந்த துறையை குறி வைக்கவுள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்,” என்றனர். அதற்கு நீதிபதிகள், “அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது தானே அரசின் நோக்கமாக இருக்க முடியும்,” என்றனர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதை மாநில அரசே பார்த்துக்கொள்ளும்,” என்றார்.

பின்னர் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் எஸ்.வி.ராஜூ, ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆகியோர் தங்களது வாதத்தில், “டாஸ்மாக்குக்கு எதிராக மாநில போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சமாக பெற்ற பெரும் தொகையைக் கொண்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒருவர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலித் தொடர் குறித்தும் முழு பின்னணி குறித்தும் ஆராய வேண்டியது தான் எங்களின் வேலை.

இதற்காகத்தான் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினோம். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் அங்கு உள்ளன என்பதால் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதை ஆதாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளோம். டாஸ்மாக் டெண்டர், மதுபான கொள்முதல், பார் உரிமம் என அனைத்திலும் லஞ்ச லாவண்யம் நடந்துள்ளது.

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதை டாஸ்மாக் மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இதை மறைக்க உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்பதால் அங்கு சோதனை நடத்தப்பட்டது. இப்படித்தான் விசாரணை நடத்த வேண்டும் என யாரும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட முடியாது.

ஒருசில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றாலும் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களை மறைப்பதும், அதற்கு உடந்தையாக செயல்படுவதும் குற்றம் தான். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கெனவே பதியப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவராக இல்லை என்றாலும், அமலாக்கத் துறை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படலாம்,” என வாதிட்டனர்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை