சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது. வரும் 1ந்தேதி (ஏப்ரல்) முதல் சென்னை தலைமைச்செயலகம் காகித மில்லா அலுவலகமாக மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும், காகிதங்களில் பயன்பாடுகளை குறைக்கும் வகையில், தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதற்கான உத்தரவு கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன் பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியுள்ளது. அதை தடுக்கும் வகையில்,  அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம் ஆவணங்களை அனுப்பி இ-கவர்னன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதற்கான மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதைத்தொடர்ந்து பெரும்பாலான அரசு துறைகள் காகிதங்கள் உபயோகப்படுத்துவதை குறைத்து வருகின்றன. இதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் துறைகளுக்கு அரசு சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சென்னை தலைமைச் செயலகம் 100 சதவிகிதம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து டிஜிட்டல் முறைக்கு தேவையான கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் இணைக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 1ந்தேதி முதல்  முதற்கட்டமாக சில துறைகளையும் பின்னர் அனைத்து துறைகளும் மின்னணுமயமாக்கப்பட உள்ளன. இதற்காக போதுமான பயிற்சிகள் தலைமைச்செயலக ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் 100 சதவிகிதம் காகிதமில்லா பயன்பாடு நடைபெறுக்கு வரும் என்றும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.