நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள்மீது இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து கப்பலைக்கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்ககை கடலில் மீன்பிடித்துவரும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டு உள்ளது. மேலும் அவ்வப்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசை வலியுறுத்தி ஏராளமான போராட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில்கூட இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர்களில் 12 பேருக்கு, இலங்கை மதிப்பில் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. இது தமிழன மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  பல மாவட்டமீனவர்கள் இலங்கை அரசையும், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசையும் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில்,  நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள்  கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலைக்கொண்டு மீனவர்களின் படகுகள் மீது  மோதி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். கார்த்தி, சண்முகம், தேவராஜ், ராமையன் உள்ளிட்ட 4 மீனவர்கள் காயங்களுடன்  நாகை திரும்பிய நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்ததுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.