சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை (07.05.2025) ஆன்லைனில் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் (மே 8ந்தேதி) வெளியாக உள்ள நிலையில், மாணவர்களின் வசதிக்காக முன்கூட்டியே, அதாவது மே 7ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

12ம் வகுப்பு தேர்வுகளை எழுதிய மாணவர்கள், இளநிலை பட்டயப்படிப்பு மற்றும் மருத்துவம், பொறியியல் என அவர்கள் விரும்பும் பாடப்பிரிவிகளை எடுத்து படிக்க தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே மருத்துவடிப்புக்கான நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பி.பிளான் ஆகிய படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்துக்கு அதிமான என்ஜினீயரிங் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்காக 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நடப்பு கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார்.மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.