சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழக அரசு அறிவித்த ஆசிரியர்கள் தகுதிகளுக்கான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய வேண்டுமெனில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் விதியின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோரை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் டெட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டுக்கான தகுதித் தேர்வு நடந்தது. அதற்கு அடுத்து தேர்வு நடக்கவில்லை. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பும் வெளி வந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, விண்ணப்பிக்க இன்று கடைநாளாகும். இன்று மாலை 5 மணிக்குள் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம்.இன்று மாலை 5 மணிக்குள் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றலாம்.
இந்த அறிவிப்பின்படி நவம்பர் 15, 16ம் தேதிகளில் மேற்கண்ட தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 நடத்தப்பட உள்ளன.
முன்னதாக, உச்சநீதிமன்றம், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் தொடரவோ அல்லது பதவி உயர்வு பெறவோ முடியும். தேர்வை எழுத விரும்பாத ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளே உள்ள ஆசிரியர்கள் மட்டும் டெட் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. மேலும் சிறுபான்மையினர் பள்ளிக் கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்ப்பு சாத்தியமா என்பதை ஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவால், 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1.5 இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, தமிழ்நாடு அரசு ஒரு ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்திற்கு தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையேற்றார். மேலும் சட்ட நிபுணர்கள், பள்ளிக் கல்வித் துறை செயலரான சந்திரமோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைக் காட்டிலும், ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக சிறப்பு டெட் தேர்வை நடத்தலாம் என இக்கூட்டத்தில் சட்ட நிபுணர்கள் பரிந்துரைத்தனர். மேலும் ஆண்டுக்கு 2 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தினால், அது ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.