டெல்லி: இயந்திர வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் விவிபேட் (VVPat Machine) ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக்கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்றம் இன்று என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

18வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல்கட்ட தேர்தல், ஏப்ரல் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அடுத்த 6 கட்ட தேர்தல்கள் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அதன் தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், மின்னணு ஒப்புகைச் சீட்டு (விவி பாட் இயந்திரம்) கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நாம் யாருக்கு நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது, விவிபேட் இயந்திர திரையில் 7 நொடி தோன்றும். இதன்மூலம் நம்முடைய வாக்கு சரியான வேட்பாளர்களுக்கு சென்றுள்ளதா என்பதை காணலாம். இதில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகள் தொகுதிக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே எண்ணப்படுகிறது.
இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் எனப்படும் மின்னணு ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என்றும், 100 சதவிகிதம் ஒப்புகை சீட்டுக்கள் எண்ணப்பட வேண்டும் என்றும், அதேபோல் விவிபேட் இயந்திரத்தில் ஒளிபுகா கண்ணாடியை வைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கானது கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்து, பின்னர் 18 ஆம் தேதியும் தொடர் விசாரணை நடைபெற்றது. அப்போது வாக்குப்பதிவுக்குப் பின் விவிபேட் இயந்திரங்களை முழுமையாக ஆய்வு செய்வதால் வெளிப்படை தன்மையை அதிகரிக்க முடியும். எனவே 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர்.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் ஆஜராகி வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விளக்கமளித்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.