டெல்லி:  கடலூர் மாவட்டம்  வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமான பணிக்கு  உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில்,  வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானம் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை மீறி பணிகள் நடைபெற்றன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது.. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம்  வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய திட்டம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடங்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வடலூரில் வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் சர்வதேச மையத்தின் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த பிரசித்தி பெற்ற சத்திய ஞான சபை அமைந்துள்ளது.  இருது  1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  இந்த சத்திய ஞான சபை உலக புகழ் பெற்றது. இங்குள்ள அணையா விளக்கு எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும்.

இதை மேலும் பிரபலப்படுத்தும் வகையில்,  வள்ளலாரின் கருத்துக்களை பரவலாக்கும் விதமாக வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்ததும் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு கட்டுமான பணிகளுக்காக 99.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால்,  இந்த கட்டுமான பணிகளுக்காக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்திருக்கும் பெருவெளி என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு வள்ளலார் ஆதரவாளர்கள், அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அருட்பெருஞ்ஜோதியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் சன்மார்க்க அன்பர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் எதிர்ப்பையும் மீறி திமுக அரசு,  திட்டமிட்டபடி சர்வதேச மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடத்தப்பட்டு பணிகள் துவங்கியது. இதனை எதிர்த்து ஞான சபைக்கு இடம் கொடுத்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை அடுத்து சர்வதேச மையம் அமைப்பதற்கு அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பெருவெளியில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்த  உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடத்தப்பட்டு வடலூரில் சர்வதேச மையத்தில் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.