சென்னை: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டடுள்ள பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா அரசியலமைப்புச் சட்டத்தை களங்கப்படுத்தும் என்றும் இது ஒரு கருப்பு மசோதா ன்றும் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின்மூலம் சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது, இது ஒரு கருப்பு சட்டம் என்றும் விமர்சித்துள்ளார்.

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தாக்கல் செய்யப்பட்டத. டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மசோதாவின் நகரை கிழித்து அமித்ஷாக்கு எதிராக சிலர் வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மசோதா குறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப்பதிவில் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். அதில், இந்த, 130-வது அரசியல் சட்டத்திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவி நீக்கம் செய்யலாம். பாஜக வைத்ததுதான் சட்டம்.
வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு: எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும். மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன். பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது.
வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பாஜக அரசு அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகியுள்ளது. தற்போதைய பாஜக அரசு சட்டப்பூர்வமானதா என்பதே ஐயமாக உள்ளது. தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீர்ப்பைக் களவாடியுள்ள பாஜக தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த அரசியலமைப்பு 130-வது திருத்தம் சட்டமுன்வடிவை கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது பொய் வழக்குகளைப் புனைந்து, எந்த விசாரணையும் தீர்ப்பும் இன்றியே, 30 நாட்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவிநீக்கம் செய்யலாம் எனும் சட்டப்பிரிவுகளின்கீழ், அவர்களை ஆட்சியில் இருந்து பாஜக அகற்றவே இது வழி செய்கிறது.
குற்றம் என்பது தீர விசாரித்த பிறகே முடிவாகும். வெறுமனே வழக்கு பதிவதால் முடிவாகாது என்பதால், அரசியலமைப்புக்குப் புறம்பான இந்தச் சட்டத்திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும். மேலும், பல மாநிலங்களிலும் முதல்வர்களாக, அமைச்சர்களாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவர்களை, “ஒழுங்காக எங்களுடன் இருங்கள், இல்லையென்றால்…” என்று மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது.
எந்தச் சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளைக் கைது செய்யவும் பதவிநீக்கவுமான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் இந்தச் சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., சில முக்கியமான மசோதாக்களை, இறுதி நாளில் தாக்கல் செய்வதை மத்திய பாஜக அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. நாட்டின் ஜனநாயகத்தை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே, பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக துடிக்கிறது.
பல மாநிலங்களில் இருப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா அல்லது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து உருவாக்கிய ஆட்சியா என்ற ஒரு மிகப்பெரிய கேள்வியை, ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு பிரச்சாரம் மக்கள் மனதில் விதைத்துள்ளது. ஆனால், எந்த பதிலையும் நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்கள் கூறவில்லை. இதுகுறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.