நாகப்பட்டினம்

மீண்டும் தமிழக மீனவர்க மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆற்காட்டுத்துறையில் இருந்து சந்திரகாசன் என்பவரின் பைபர் படகில் பன்னீர்செல்வம், வேல்முருகன், முத்து, கிருஷ்ணன் ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் 4 பேரும் கோடியக்கரையில் இருந்து தென் கிழக்கே நேற்று இரவு 10.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீன் பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களின் படகில் ஏறி வீச்சரிவாள், இரும்பு பைப்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களின் படகில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 700 கிலோ மீன்பிடி வலைகளை பறித்துவிட்டு விரட்டி அடித்துள்ளனர். மீனவர்கள் 4 பேரும் இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களை கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.