ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இந்த நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. பல சமயங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன. ஆனால், இதுவரை சமசரசம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எப்போதும் போல் கடிதம் எழுதுவதும் வாடிக்கையாகவே தொடர்கிறது. தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்தியஅரசு முறையான முடிவு எடுக்க மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.