சென்னை: வார இறுதி  விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வருகிற சனி (ஆக.10) மற்றும் ஞாயிறு (ஆக.11) ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.9) அன்று 275 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆக.10) அன்று 315 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.9) அன்று 55 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆக.10) அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதாவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (ஆக.9) அன்று 20 பேருந்துகளும் சனிக்கிழமை (ஆக.10) அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட உள்ளது.

மேலும், ஞாயிறு (ஆக.11) அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை (ஆக.9) அன்று 8,739 பயணிகளும் சனிக்கிழமை (ஆக.10) 3,414 பயணிகளும் மற்றும் ஞாயிறு (ஆக.11) அன்று 8,107 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இனையவழி மூலம் அல்லது Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.