சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், இந்த ரயிலில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் 2025ம் ஆண்டு ஜனவரியில் ஏசிபெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும், அதற்கான சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக,  போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரயில் முக்கிய பங்காற்றி வருகிறது. பல ஆண்டுகளாக புறநகர் மக்களின் தேவையைபூர்த்தி   செய்வதில் மின்சார ரயில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.   சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும்  மின்சார ரெயில்கள் தினசரி 600-க்கும் மேற்பட்ட சேவைகள் செய்து வருகிறது. மேலும்,   பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய ரயில்சேவைகளையும் தொடங்கி வருகிறது.

இந்த நிலையில்,  கோடை காலத்தில், மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கையை ஏற்றுள்ள தெற்கு ரயில்வே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏசி ரெயில் பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தெற்கு ரெயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது. எனவே, மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெற்கு ரெயில்வே ஆய்வு செய்தது.

இதைத்தொடர்ந்து,  ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்து பெட்டிகளை தயாரிப்பதற்கான பணியை தெற்கு ரெயில்வே தொடங்கியது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) ஏசி ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக,  சென்னை ரெயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே வரும் நவம்பர் மாதத்தில் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு, சோதனை ஒட்டம் செய்ய தெற்கு  ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ சிபெட்டிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து,  கூறிய தெற்கு ரெயில்வே அதிகாரி , பெரம்பூரில் உள்ள ஐசிஎப்பில் ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார ரெயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வேக்கு 12 ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புறநகர் மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகளை இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.