சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் தென்மாவட்ட விரைவு ரயில்கள் மற்றும் சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள்  3 நாட்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி வரும்  15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது என குறிப்பிட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. இதனால் சில மாதங்கள் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மின்சார ரயில்களின் சேவைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையில், விரைவு பேருந்துகள் 3 நாட்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக,  அனைத்து விரைவு ரயில்களும்  வரும் 15, 16, 17 தேதிகளில் செங்கல்பட்டில் நின்று செல்லு என  தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கொல்லம் (வண்டி எண்.16101), கன்னியாகுமரி (12633), நாகர்கோவில் (12667), ராமேசுவரம் (16751), தூத்துக்குடி முத்துநகர் (12693), கொல்லம் அனந்தபுரி (20635), திருநெல்வேலி (12631), செங்கோட்டை பொதிகை (12661), காரைக்கால் (16175), மதுரை தேஜஸ் (22671), ஹஸ்ரத் நிஜாமுதீன் – மதுரை சம்பர்க் கிராந்தி (12652) ஆகிய விரைவு ரயில்கள் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

இதேபோல், வெளியூர்களில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வந்தடையும் கொல்லம் (16102), சேலம் (22154), தஞ்சாவூர் உழவன் (16866), நாகர்கோவில் (22658), செங்கோட்டை (20682), காரைக்கால் (16176), மதுரை (22624), முத்துநகர் (12694), குருவாயூர் (16128), மதுரை தேஜஸ் ஆகிய விரைவு ரயில்களும் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.

இதற்கு பதிலாக இந்த ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.