டெல்லி

விரைவில் பிரமுகர்கள் பாதுகாப்பு பணியிலிருந்து கருப்பு பூனைப்படையினர் விடுவிக்கப்பட உள்ளனர்.

கடந்த 1984-ம் ஆண்டு என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, உருவாக்கப்பட்டது. இக்குழு பயங்கரவாத தாக்குதல்கள், விமான கடத்தல்கள் ஆகியவற்றின்போது பயன்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது.  காலப் போக்கில் அதன் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புக்கு அனுப்பப்பட்டனர்.

கருப்பு பூனைப்படை தற்போது, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ள 9 மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, மத்திய கப்பல்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி ராமன்சிங், முன்னாள் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளனர்.

மேலும், இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் என்ற துணை ராணுவப்படையின் பாதுகாப்பில், பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் உள்ளனர்   மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஆகிய துணை ராணுவப்படைகள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட 200-க்கு மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து கருப்பு பூனைப்படை முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற யோசனை, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எனவே விரைவில் இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்து அதன்படி, ஒவ்வொரு முக்கிய பிரமுகருக்கான பாதுகாப்பை வாபஸ் பெறுவதா, குறைப்பதா, அதிகரிப்பதா என்று முடிவு செய்யப்படும்.  கருப்பு பூனைப்படை, இந்தோ திபெத்திய எலலை போலீஸ் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பொறுப்பில் இருந்து முற்றிலும் விடுவிக்க முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.