டில்லி

சொத்துக்காக தனது 80 வயதான மாமனாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிந்தாப்பூரை சேர்ந்தவர் சிங் (வயது 80).  இவருக்கு ஒரு சொந்த வீடு சுமார் 70-80 லட்சம் மதிப்பில் உள்ளது,  இவரது மருமகன் விஜேந்தர் (வயது 54).  இவரது மகன் ஹேமந்த்.

சிங் தனது மகனின் மகனுக்கு  வீட்டை எழுதி வைக்க விரும்பினார்.   அந்தப் பேரனின் பெயரும் ஹேமந்த்.  ஆனால் அவரது மருமகன் விஜேந்தரும், மகளும் இவரை ஏமாற்றி தங்களின் மகன் ஹேமந்த் பெயருக்கு இவர் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டனர்.  இதை அறிந்த சிங் போலிசில் தனது மகள், மருமகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரன் ஹேமந்த் மீது புகார் அளித்தார்.

விஜேந்தரை கைது செய்த போலீசார் அவரை காவலில் வைத்தனர்.  தன்னை போலிசில் மாட்டிக் கொடுத்த மாமனார் மேல் ஆத்திரம் அடைந்த விஜேந்தர் வீட்டுக்கு வந்ததும் யாருமில்லா நேரத்தில் சிங் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டார்.   பிறகு தலை மறைவாகி விட்டார்.

கொலை பற்றி போலிசாருக்கு தெரிந்து விட்டது என்பதை அறிந்த விஜேந்தர் அவராக வந்து போலீசுக்கு சொல்வது போல சொல்லி இருக்கிறார்.   அவரை போலிஸ் கைது செய்துள்ளது.