சென்னை: சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை என்றும், சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்த தெரிவித்துள்ளது.
கோவில் அறங்காவலர் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அறங்காவலர் பதவிக்கு பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மீக, அற சிந்தனை தான் அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, சாதி அல்ல எனவும் சுட்டிக்காட்டியதுடன், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, ஆவல்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் மற்றும் சென்ராய பெருமாள் கோயில்களுக்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரிய விண்ணப்பத்தை விசாரிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, “சாதியை நீடித்து நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான இந்த கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், சாதி, ஒரு சமூக தீங்கு. சாதியில்லா சமுதாயம் தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது எனத் தெரிவித்துள்ளார். சாதி என்பது கற்றுக் கொண்டதில் இருந்தோ, வாழ்வில் செய்த செயல்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, பிறப்பால் வரும் இது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
சாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்க கூடாது, சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவாக இருந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதியின் சாதி என்ற சுமை தேவையில்லாதது என்ற கருத்து வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்றைய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் சாதிகளை மையமாக வைத்துதானே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். சாதிய இடஒதுக்கீடு, குறிப்பிட்ட சாதிகளுக்கான சலுகைகள் போன்றவை மக்களிடையே பிளவுகளையும், சாதிய வேறுபாடுகளை அதிகரிக்க உதவுமே தவிர, சாதிகளை ஒழிக்க பிரயோசனப்படாது என்பதை நீதிபதிகள் மறந்துவிடுவது ஏன் என்பதுதான் தெரியவில்லை.
சாதி ஒரு சுமை என கூறும் நீதிபதி, ஏன் சாதிச்சான்றிதழ் வழங்க தடை விதிக்கக்கூடாது….? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.