திருவனந்தபுரம்
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் குறித்த சில விவரங்கள் இதோ

1923-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ஆலப்புழை மாவட்டம் புன்னபுராவில் பிறந்தவர், வி.எஸ்.அச்சுதானந்தன். அவருடைய இயற்பெயர் சங்கரன் அச்சுதானந்தன். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். 7-ம் வகுப்பு வரை படித்த அவரால், தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதனால் துணிக்கடையில் அவர் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்.
கேரளாவின் மூத்த அரசியல்வாதியான வி.எஸ்.அச்சுதானந்தன் மிகவும் எளிமையானவர். கேரளாவில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தவர். இதுதவிர 1992-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மக்கள் பணியாற்றினார். பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காதவர்.
1980-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராகவும், நீண்ட காலம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவு கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் பேரிழப்பாகும்.
வி.எஸ்.அச்சுதானந்தன், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஊழலுக்கு எதிராக கடுமையாக போராடினார். இடமலையார் அணை கட்டுமான ஊழலில் ஈடுபட்ட முன்னாள் மின்சாரத்துறை மந்திரி பாலகிருஷ்ண பிள்ளைக்கு எதிராக அவர் நடத்திய தொடர் சட்ட போராட்டம் இன்றும் பேசப்படுகிறது. அந்த சட்ட போராட்டம் மூலம் மந்திரியையும் சிறைக்கு அனுப்பினார். புன்னபுராவில நடந்த போராட்டம் ஒன்றில் போலீசாரின் கொடூர தாக்குதலுக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.