கனோ: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தப்பட்டு உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். நைஜீரியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ள கதுனா மாநிலத்தின் தாமிசி மாவட்டத்தில் உள்ள சிக்குன் பகுதியில் பெத்தேல் பாப்பிஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் இந்த மாணவர்கள் கடத்தல் நடைபெற்றுள்ளது.

நைஜிரியா நாட்டில் அவ்வப்போது பள்ளி சிறுவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் கடத்திச் செல்வது வாடிக்கையாகி உள்ளது.

இந்த நிலையில்,  தாமிசி மாகாணத்தில் செயல்பட்டு வந்த பெத்தேல் பாப்பிஸ்ட் என்ற கிறிஸ்தவ  உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை கடத்தல் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சுமார்  200 பேர் வரை தங்கி படித்து வருகிறார்கள்.  இங்கு நேற்று  (ஜூலை 5) அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கியுடன் பபுகுந்த பயங்கரவாதிகள், தூங்கிக்கொண்டிருந்த மாணவர்களை எழுப்பி, சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்து உள்ளனர். பயங்கரவாதிகள் உள்ளே புகுந்ததும், சில மாணவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அங்குள்ளற போகோ ஹரம் பயங்கரவாதிகளால் கடந்த   2014ஆம் ஆண்டு 76 மாணவிகளை கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.