டெல்லி: மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” என தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு சட்ட திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். அதுபோல துணைவேந்தர் விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும் சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்? சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்? இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என ஆளுநர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்ததினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்தியஅரசின் அட்டர்னி ஜெனரல்,, மசோதைவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான் என கூறினார்.
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்டத்துக்கு, விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவ்வாறு சட்டங்களுக்கு எதிராக உள்ள மசோதாவிற்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? என கேள்வி கூறியதுடன்,
ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். அதனை நீக்க வேண்டும். முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது என்றார்.
இதையடுத்து, ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, பல்கலைக்கழகங்களின் செயல்பாடு குறித்து ஆளுநர் கடிதம் பெறுகிறார். துணைவேந்தரின் மாநாடு நடைபெற இருந்தது. ஆனால், அரசு, சில துணைவேந்தர்களை அரசு அணுகி. மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என கூறி உள்ளது.
யுஜிசி விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது என்று குற்றம் சாட்டியதுடன், அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதா மாநில அரசால் கொண்டுவரப்பட்டது என்றார்.‘
மேலும், ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் எனறால் அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஏன், மாநில அரசே, இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று ஆளுநரை கேட்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது.
இதைவிடுத்து ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200ன் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாகும் என்றார்.
நாடுமுழுவதும் மாநிலங்களுக்கும் – ஆளுநர்களுக்கும் இடையே முரண் மற்றும் ஆளுநர்களுக்கு எதிராக புகார்கள் உள்ளதாக கூறலாம். ஆனால் தனது கருத்தை வெளிப்படுத்தி, மசோதாவில் திருத்தம் செய்து, சரியான இரு தரப்புக்கும் சாதகமான பரிந்துரைகளை சேர்க்க விரும்புகிறார் என்றே கூற முடியும்.
அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு நான்கு அதிகாரங்கள் உள்ளது. assent, withholding, reserving and Repugnance. மசோதாவுக்கு ஒப்புதலை வழங்காமல் நிறுத்தி வைக்கும் போது இவ்வாறுதான் செயல்பட வேண்டும் என எந்த நேரடி விதிகளும் அரசியலமைப்பில் இல்லை. ஆளுநரிடம் அல்லது குடியரசுத் தலைவரிடம் மசோதா நிலுவையில் இருக்கும்போது அது சட்டப்பேரவையில் காலாவதியாகாது. எனவே தான் முடிவெடுக்க ஆளுநருக்கு எந்தக் கால நிர்ணயம் அரசியல் சாசனத்தில் செய்யப்பட வில்லை என வாதிட்டார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 2023ம் ஆண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர் தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்?. இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா? என வினவினர்.
இதற்கு ஆளுநர் தரப்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் அளித்த பதிலில், மசோதாக்கள் அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
மேலும், ஆளுநர், அரசியல் சாசனம் 200ன் முதல் விதி மூலம் முடிவெடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. எல்லா சந்தர்ப்பங்களிலும் மசோதாவை ஒத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
சட்டப்பிரிவு 200ன் எந்தப் பகுதியிலும் குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்புவது தடுக்கப்படவில்லை. மேலும், மேற்கூறிய விவகாரங்களில் நீதிமன்றத்தின் மூலம் மறுஆய்வு செய்வதற்காக வழிமுறை ,சாத்தியக்கூறுள் என்பது மிகவும் குறுகியது ஆகும். அதேபோல, அரசியல்சாசன பிரிவு 200ஐ அரசியல்சாசன பிரிவு 254 உடன் படித்தால், எந்த நிலையிலும் ஒரு மசோதாவை குடியரசு தலைவருக்கு முடிவெடுக்க அனுப்புவதற்கான வழிமுறை என்பது எப்போதும் உண்டு. அதை குறிப்பிட்ட நிலையில் தான் அனுப்ப முடியும் என்று இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய அட்டர்னி ஜெனரல் மசோதாவுக்கு ஒப்புதல் இல்லாமல் குடியரசு தலைவரிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை என்றார்.
அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா ? (Repugnance set at rest) என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய வாதாடிய அட்டர்னி ஜெனரல் , ஆளுநரின் பணிகள் என்பது அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு அங்கம் ஆகும். மேலும் ஆளுநருக்கு அனுப்பிய அனைத்து மசோதாக்களும் புதிய சட்டங்கள் அல்ல. மாறாக அவை சட்ட திருத்தங்கள். அதனை குடியரசுத் தலைவர் முடிவுக்காக ஆளுநர் நிறுத்திவைக்கிறார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உங்கள் வாதப்படி பல்கலைக்கழகங்களின் தரம், துணைவேந்தர்கள் குறித்து கவலை கொண்டு மசோதாக்களை நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? என வினவினர்.
இதற்கு பதில் கூறிய அட்டர்னி ஜெனரல் , மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பின் எதற்காக என்று அவர் காரணத்தை கட்டுரை எழுத தேவையில்லை. ஏனெனில் மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் என்றால், அது அவரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை என்பதுதான் அர்த்தம். அதை அவர் சிறிய குறிப்பாக குடியரசு தலைவர் முடிவுக்கு அனுப்புகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் அரசு சட்டத்தை நிறைவேற்றும்போது, அமைச்சரவையின் ஆலோசனை மூலமே கொண்டு வரும். அந்த சட்டத்தில் முரண் இருந்தால், அந்த சட்டம் சரியானது அல்ல. அதனை சரி செய்யுங்கள் என தெரியப்படுத்துவது ஆளுநரின் கடமை ஆகும் என்றார்.
இதையடுத்து, பேசிய நீதிபதிகள், ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போது என்ன குறிப்பை தெரிவித்து அனுப்பினார் ? என கேள்வி எழுப்பியதுடன், இந்த மசோதா மீது முடிவெடுக்க தனக்கு அதிகாரம் இல்லை, குடியரசு தலைவரே ஆராய்ந்து முடிவெடுங்கள் என கூறினாரா? அல்லது எதன் அடிப்படையில் அனுப்பினார் என்பதை விளக்குங்கள்?. வெறுமனே குறிப்பு இல்லாமல் ஒரு மசோதாவை அனுப்பினார் என்றால் ஏன்? என வினவினர்.
இதறகு பதில் கூறிய ஆளுநர் தரப்பு வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் , ஆளுநர் குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பும் போது அதை எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை கூற தேவை இல்லை என்றார்.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மசோதாவை அனுப்பும்போது, ஆளுநர் ஏதாவது ஒரு காரணத்தை குடியரசு தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றவர், மசோதா தொடர்பான காரணத்தை, நாட்டின் குடியரசு தலைவர் அவராகவே கேட்டு தெரிந்து கொள்வாரா? என கேள்வி எழுப்பியதுடன், ஒரு மசோதா சரியல்ல என்று கூறி முதல் நாளே குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க முடியாது மறுக்க முடியுமா?. மேலும், குடியரசு தலைவர் எந்த காரணத்தையும் அவ்வாறு கூறாமல், நான் நிறுத்துகிறேன் என்று கூறுகிறார் என்றால் என்ன? வினவினர்.
இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல், ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது என்பது, அது சரியானது அல்ல repugnance) என்பதையே குறிக்கிறது என்றார்.
அப்போகு குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியெனில் மசோதைவை நிராகரிக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய ஆளுநர் தரப்பு அட்டர்னி ஜெனரல், மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்பு தான் என கூறினார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 200, 201 குறித்த அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க நீதிமன்றம் மறுப்பதாக தெரிவித்தனர்.
மேலும், அரசியல் சாசன பிரிவு 200ன் முதல் விதியை புரிந்து கொள்ளாமல் நிராகரித்தால், வழக்கில் விசாரிப்பதற்கே ஒன்றும் இல்லை. இதோடு அனைத்தும் முடிந்தது என்றே அர்த்தம். எனவே உரிய விளக்கத்தை தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் ஆளுநர் தொடர்பான வழக்கை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
முன்னதாக நேற்று (பிப்ரவரி 6ந்தேதி) நடைபெற்ற விசாரணையின்போது, அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லாத தனது சொந்த நடைமுறையை ஆளுநர் வகுத்ததாகத் தெரிகிறது என்றும், அவ்வாறு செய்வதற்கான சட்ட அடிப்படையை அவரிடமிருந்து அறிய முயன்றதாகவும், மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு பதிலாக ஒப்புதலை நிறுத்தி வைப்பதன் மூலம் அரசியலமைப்பின் 200 வது பிரிவை விரக்தியடையச் செய்கிறார் அல்லது மசோதாக்களை மறுபரிசீலனைக்கு சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புகிறார் என்று கூறியது.
அரசின் மசோதாக்களுக்கு “ஒப்புதலை நிறுத்தி வைப்பதும், அதை சட்டமன்றத்திற்கு அனுப்பாமல் இருப்பதும் அர்த்தமற்றது, இதன் மூலம் பிரிவு 200 இன் விதிமுறையை மீறுதலாகும். அவர் தனது சொந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது” என்று பெஞ்ச் கூறியது.
மசோதா நிறுத்தி வைக்கும் முடிவை எந்த காரணமும் கூறாமல் எப்படி எடுக்க முடியும் என்றும், அது முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கும் என்றும் ஆளுநர் மறுபரிசீலனை கோரும்போது காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அமர்வு கூறியது.