டெலி: கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற  பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம்  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சம்பவம்  தொடர்பாக காவல்துறையும், தமிழக அரசும் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பர்கூர் அருகே கிங்ஸ்லி  கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற தனியார் பள்ளி   சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர். அப்போது மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியை உடந்தையாக இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்த நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாகவே விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆணையர் தனது  எக்ஸ் சமூகவலைதளத்தில், கிருஷ்ணகிரியில் என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற ஊடகச் செய்தியின் அடிப்படையில் அது தொடர்பாக ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறது. இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் நியாயமான விசாரணையை உறுதி செய்ய தமிழக டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிடுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்துகிறது.

கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பாக காவல்துறையும், தமிழக அரசும் மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

தருமபுரி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை!