சென்னை: சென்னை அருகே பிரபல ரவுடியை பிடிக்கச்சென்ற காவல்துறையினரை அரிவாளால் வெட்ட முயன்ற நிலையில், அந்த ரவுடியை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர்மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. தாம்பரம் அடுத்த சோமங்கலம் காவல்நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக ரவுடி சச்சினை காவல்துறையின்ர தேடி வந்தனர்.

இந்த நிலையில் ரவுடி சச்சின் தாம்பரம் சாய்ராம் கல்லூரி அருகே உள்ள காட்டு பகுதியில்பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தனிப்படை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சச்சின் தப்பிக்கும் முயற்சியில், காவல்துறையினரை அரிவாளால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் அவனை முழங்காலுக்கு கீழே இரண்டு முறை சுட்டு பிடித்தனர்.

காலில் குண்டு பாய்ந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சச்சின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.