சென்னை: பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களைத் தடை செய்ய பரிந்துரை  செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது,  பள்ளிகளால் அல்லது பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத் தடை விதிக்க மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு  இன்று  தமிழக அரசிடம் அளித்த அறிக்கையில், இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த இதுபோன்ற கோச்சிங் சென்டர்கள் செயல்படுவதாகவும் அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது

உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு இன்று சமர்ப்பித்த அறிக்கையில், பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் கோச்சிங் சென்டர்களை தடை செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளில் இவ்வாறு நடத்தப்படும் கோச்சிங் சென்டர்கள், பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமலேயே, அல்லது பாடங்களை நடத்தாமலேயே, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு மட்டும் தயார் செய்வதாக் கல்விக் கொள்கை வரையறைக் குழு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. 2021- 22ஆம்‌ ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்‌ “தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்களைக்‌ கொண்ட உயர்மட்டக்‌ குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்‌’” என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை வகுக்கப்படும் என  கூறியிருந்தார்.

அதன்படி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின்‌ தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி முருகேசன்‌ நியமிக்கப் பட்டார். இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குழுவின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. மாநிலக்‌ கல்விக்‌ கொள்கையை உருவாக்க‌ பொதுமக்கள்‌, கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்‌, மாணவர்கள், பெற்றோர்கள்‌ மற்றும் தனியார்‌ கல்வி நிறுவனத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ பெறப்பட்டன. இதில் இருந்து பரிந்துரைகளைத் தொகுத்து, மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது.

இதில் தமிழ்நாட்டுக்கென்ற தனித்த கல்விக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அவை என்னென்ன?

* மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது.

* மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது.

* கல்லூரி சேர்க்கையின்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.

* தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும்.

* 5 வயது பூர்த்தியான மாணவர்கள் 1ஆம் வகுப்பில் சேரலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மாநிலக்‌ கல்வி கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால்‌ அமைக்கப்பட்ட குழு இன்றையதினம்‌ தமிழ்நாடு முதலமைச்சரிடம்‌ தனது அறிக்கையினை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.