டெல்லி

ச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. நீட் தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. அப்போது இளநிலை நீட் தேர்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது. நாடு முழுவதும் வரும் 11 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.

நாடெங்கும் உள்ள 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவிருக்கும் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தொலைதூர நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனபடி இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி, கடைசி நேரத்தில் எப்படி தேர்வை தள்ளிவைக்க முடியும்?. கடைசி நேரத்தில் தேர்வை தள்ளிவைக்கக் கோரி கோர்ட்டை நாடுவது தற்போது வழக்கமாகி வருகிறது. தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம் ஆகும். ஒருசில மாணவர்கள் கோர்ட்டை நாடியதால் 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்