டெல்லி

ச்சநீதிமன்றம் விசாரணை என்னும் பெயரில் தண்டனை அளிக்கலாமா என கேள்வி எழுப்பி உள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறப்படும் முறைகேட்டில் தொடர்புடையதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 11ம் தேதி, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதா மீது கடந்த ஜூன் 6ம் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்குகளில் ஜாமீன் மறுத்ததால் கவிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர். கடந்த 20ம் தேதி விசாரணையின்போது, டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனு மீதான பதிலை வரும் 22ம் தேதிக்குள் தாக்கல் செய்வதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வதான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஒரு தலைபட்சமாக நடந்து கொள்ள முடியாது என்றும் ஏற்கனவே பிணையை வழங்க மறுத்த தனி நீதிபதி, தவறான வழிமுறையை கையாண்டிருக்கிறார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நியாயமான விசாரணை செய்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது எனக்கூறி கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.