ரியாத்

வுதி அரேபிய அரசு இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்குத் தடை விதித்துள்ளது.

கடந்த 1926 ஆம் வருடம் தப்லீக் ஜமாத் அமைப்பு ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.  இதன் பொருள் நம்பிக்கையை பரப்புவதற்கான சங்கம் என்பதாகும்.  இந்த அமைப்பு ஆடை அணிதல், தனிப்பட்ட நடத்தை மற்றும் சடங்குகள் போன்றவற்றில் மதரீதியாக கடைப்பிடிக்க வேண்டும் என முஸ்லிம்களை  வலியுறுத்துகிறது. இந்த அமைப்புக்கு உலகம் முழுவதிலும் சுமார் 40 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சவுதி அரேபிய அரசு இந்த அமைப்புக்குத் தடை விதித்துள்ளது.   சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத்துறை டிவிட்டரில் அமைச்சர் அப்துல் லத்தீப்,  “சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாவா குழு உள்ளிட்ட பாகுபாடான குழுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மசூதிகளின் போதகர்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் மசூதிகள் இந்த குழுக்களுக்கு எதிராக மக்களை எச்சரிக்க அடுத்த வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்க வேண்டும் ” எனப் பதிந்துள்ளார்.

மேலும் அமைச்சகம், “இந்தக் குழுவின் தவறான வழிகாட்டுதல், பொதுநிலையில் இருந்து விலகல் மற்றும் ஆபத்து பற்றி மசூதிகளின் போதகர்கள் பிரகடனம் செய்ய வேண்டும். அந்த அமைப்பினர் வேறுவிதமாகக் கூறினாலும் அந்த அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்றாகும். அவர்களின் முக்கியத் தவறுகளை விளக்க வேண்டும். சமூகத்திற்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தைக் குறிப்பிட வேண்டும்” என்று கூறி உள்ளது.