டில்லி,

டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் இன்று 7வது நாளாக தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ‘மரண போராட்டம்’ நடத்தி வருகின்றனர். அவர்களை ஏற்கனவே திமுகவை சேர்ந்த எம்.பி.க்கள்  கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், அதிமுகவில் 50 எம்.பிக்கள் இருந்தும், தலைநகரில் தங்களது வாழ்வாதார பிரச்சினைக் காக போராடி வரும் தமிழக விவசாயிகள் போராட்டதை கண்டுகொள்ளவில்லை என்று சமூக வலைதளங்களிலும், அரசியல் விமர்சகர்களும் சாடி வந்தனர்.

இந்நிலையில், சசி அதிமுகவை சேர்ந்த எம்.பிக்கள், பாராளுமன்ற துணைசபாநாயகர்  தம்பிதுரை தலைமையில்  விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது, தம்பிதுரை பேசியதாவது, தமிழக விவசாயிகள் மாநில அரசின் கோரிக்கைகளையே வலியுறுத்தி போராடுகிறார்கள். விவசாயிகளுடன்  நீர்வளத்துறை மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்திக்க வைக்கிறேன்.

மேலும், விவசாயிகள் போராட்டங்களை விட்டுவிடுங்கள். இந்த பிரச்சினையை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றும் கூறினார்.

இதுகுறித்து போராடி வரும் விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு கூறியதாவது,

நாங்கள்  ஏழு நாட்களாக சட்டை வேட்டி இல்லாம ரோட்டில படுத்துக்கிடந்தோம். எங்களுக்கு டில்லி மாணவர்கள்தான் உதவி செய்தனர்.

இன்று அதிமுக எம்.பிக்கள் வந்து உதவி செய்யறதா சொல்கிறார்கள். தம்பிதுரை பேசியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது, ‘போராட்டம் கைவிடுவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும்’ என்றார்.