கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், நேற்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், சாந்தனு, மனோபாலா, பிரியா ஆனந்த், தனஞ்செயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரின் உடல் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக கண்டீரவா மைதானத்தில் வைத்திருந்தனர். கர்நாடாவில் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னணி நடிகர் பிரபுதேவா, சரத்குமார், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் நடிகர் சரத்குமார் புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்து கதறி அழுதார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் நடைபெற்ற சரத்குமார் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமார் தன் குடும்பத்துடன் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.