சென்னை: மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் தொகுப்பூதியம்  இரு மடங்காக  உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மாநிலம் முழுவதும்  44 பின்தங்கிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 308 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2022ம் ஆண்டு செப்டம்பர் 6ந்தேதி அன்று 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில்,  உண்டு உறைவிட வசதியுடன் மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.   10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். 10ம் வகுப்பு மதிப்பெண் தவிர்த்து NTSE என்ற தேசிய திறனறிவுத்தேர்வு, NMMS எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்குரிய தகுதியாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் 44 பின்தங்கிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 308 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பூதியம் இளநிலை உதவியாளர், நூலகர்,ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடத்திற்கு 6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாகவும், அலுவலக உதவியாளர், கூட்டுபவர், துப்புரவுப் பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் ஆகிய பணியிடத்திற்கு 4.500 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுளளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு 2 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு 2024-25ஆம் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு சுமார் 10 ஆண்டிற்கு பின்னர் தாெகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போது,  தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்தும் படி  அரசாணை வெளியிட்டது. அதன்படி,  மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்தப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக செயல்படும் வகையிலும் ஒரு பள்ளிக்கு ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.16 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2023ம் ஆண்டு  ஜூன் 1-ஆம் தேதி வெளியிட்டார்.

இதன்படி மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களில் 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தெரிவு செய்து அந்தப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம், திறன் வகுப்பறை, முழுமையான உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம், சோலார் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், வகுப்பறைகளில் கண்ணாடி இழையிலான கரும்பலகைகள், மாணவர்களுக்கு நவீன வசதியுடன் கூடிய விளையாட்டுத் திடல், நுண்கலைத் திறனை வளர்ப்பதற்கான வசதிகள், பள்ளிக் கட்டடங்கள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கப்படும். இவற்றை உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கி தரமான கல்வியை அளிக்க இந்த அரசாணை வழிவகுக்கிறது.

இதன்படி, எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரே பள்ளியில் தொடங்கி, சில பிரிவுகள் ஆங்கில வழிக் கல்வியில் மாற்றியமைப்படும். இந்தத் துறையின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர்- ஆசிரியர் விகிதாச்சாரப்படி கூடுதல் ஆசிரியர்களை தேவையின் அடிப்படையில் மாறுதல் மூலம் பணி நியமனம் செய்யவும், மாணவர்கள் கல்வி மட்டுமின்றி கலை, விளையாட்டிலும் சிறந்து விளங்க அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளாக அமைத்திடலாம் எனக் கருதி அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.

மேலும் 32 மாதிரிப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், இதர வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் பள்ளி ஒன்றுக்கு ரூ.50 லட்சம் வீதம் 32 பள்ளிகளுக்கு ரூ.16 கோடியை நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. மீதமுள்ள ரூ.10 கோடியே 50 லட்சத்து 16 ஆயிரத்தை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு, சமூகப் பங்களிப்பு திட்டங்கள் மூலம் பெறுவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.