திருவனந்தபுரம் ஏப்ரல் 14 மலையாள புத்தாண்டு (விசு பண்டிகை)  முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது. மேலும், ஆன்லைனில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு  மாதப்பிறப்பின்போது, நடை திறக்கப்பட்டு, ஒருசில நாட்கள் அய்யப்பனுக்கு பூஜை புணஸ்காரங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலையில்,  தற்போது பங்குனி உத்திர ஆராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 1-ந் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சித்திரை 1ந்தேதி தமிழ்புத்தாண்டு தினத்தன்றே கேரள புத்தாண்டும் கொண்டாடப்படும் நிலையில், அதையொட்டி சபரி மலை அய்யப்பன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும், சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும்,   திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி,  கேரள தேவசம் போர்டு,  ஐயப்ப சுவாமி உருவம் பொறித்த தங்க டாலர்களை விற்பனை செய்ய முடிவு செய்யதுள்ளதாக அறிவித்து உள்ளது. மலையாள ஆண்டு பிறப்பான விஷூ பண்டிகை தினமான ஏப்ரல் 14-ந் தேதி முதல் இந்த டாலர்கள் விற்பனைக்கு வருகின்றன. அதன்படி,  1, 2, 4, 6, 8 கிராம்களில் டாலர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தேவசம்போர்டு தலைவர் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அய்யப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் இச்சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இதனை தொடர வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதன் பெயரில் 1, 2, 4, 6, 8 கிராம் என 5 வகையான டாலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

முன்னணி தங்க நகை நிறுவனங்கள் இவற்றை வடிவமைத்து தந்துள்ளன. இதன் தரம் உறுதி செய்யப்பட்டு 916 தர முத்திரையுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. சித்திரை விஷூ தினமாக வருகிற 14-ந் தேதி சபரிமலையில் இந்த டாலர்கள் விற்பனை தொடங்க உள்ளது.

ஆன்லைன் மற்றும் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி இவற்றை வாங்கி கொள்ளலாம். சன்னிதானத்தில் பூஜை செய்த பிறகு இந்த டாலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.