சென்னை: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தெரிவித்தபடி,  3 வழித்தடத்தில் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து குறித்து அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் , சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய மூன்று வழித்தடங்களில் , பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து சேவையை உருவாக்கிட , விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில்,  மணிக்கு அதிகபட்சம் 160 கிமீ வேகத்தில் ரயில் செல்லும் வகையிலான ஆர் ஆர் டி எஸ் ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 14ம் தேதி 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மிக அதிவேக ரயில் போக்குவரத்தை தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை – திண்டிவனம் – விழுப்புரம், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர், கோவை -திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மிக அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்வதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்துக்கு 160 கி.மீ. வேகத்தில் 167 கி.மீ. தூரத்துக்கு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை-காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 160 கி.மீ.-ல் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு 185 கி.மீ. தூரத்திற்கும் ரயில் இயக்கப்பட உள்ளது.

மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ வேகத்தில் ரயில் செல்லும் வகையிலான, RRTS போக்குவரத்து டெல்லி – மீரட் இடையே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.