சிம்லா

மாச்சலப்பிரதேச மாநிலத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

கடந்த பிப்ரவர் 27 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின்போது சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஹோசியார் சிங் (தேஹ்ரா), ஆஷிஷ் சர்மா (ஹமிர்பூர்), கே.எல். தாக்கூர் (நாலாகர்) ஆகியோர், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனர். பிறகு அவர்கள் மூவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

சட்டசபை செயலாளரிடம் கடந்த மார்ச் 22-ம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, 23-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்காமல் இருந்தார். அந்த மூவரும்தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை எனவும் கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தனர் எனவும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தரப்பில் தெரிவித்ததாக சபாநாயகர் கூறியிருந்தார்.

தங்கள்ராஜினாமாவை ஏற்கக்கோரி 3 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.2 நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததைதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றுள்ளது.  இன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தெரிவித்தார். அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

ஏற்கனவே மாநிலங்களவை தேர்தலின்போது கட்சி மாறி பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வில் இணைந்ததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலின்போது அவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவ்வாறு பா.ஜ.க.வில் இணைந்த 6 பேரையும் அவர்களின் தொகுதிகளிலேயே பா.ஜ.க. நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.