சென்னை: தமிழ்நாட்டில் இருந்து புரோக்கர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு  அழைத்துச் செல்லப்பட்ட 83 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து உள்ளார்.

தமிழர்களிடையே வெளிநாட்டு வேலை மோகம் தலைவிரித்தாடுகிறது. இதனால், பலர் முறையான விசா மற்றும் வேலைவாய்ப்புக்கான அனுமதியின்றி, புரோக்கர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதுபோன்று செல்பவர்களில் பலர், வெளிநாடு காவல்துறையினரிடம் சிக்கி சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புற்று வருகின்றனர். அதுபோன்று செல்வத்தை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 83 தமிழர்கள் மீட்கப்பட்டு, மத்தியஅரசு மற்றும்  தமிழ்நாடு அரசின் உதவியுடன் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார் சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 1 மணி மணியளவில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் வரவேற்றனர்

இது குறித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், 04.10.2022 முதல் 04.07.2023 வரை கம்போடியாவிலிருந்து 27 தமிழர்களும், மியான்மர் நாட்டிலிருந்து 22 தமிழர்களும், தாய்லாந்து நாட்டிலிருந்து 34 தமிழர்களும் என மொத்தம் 83 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழ்நாடு அரசின் உதவியுடன் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி செய்தித்தால்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் இருப்பினும், அதிக ஊதியம் மற்றும் பதிவுபெறாத முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி கம்போடியா-தாய்லாந்து-மியான்மர் ஆகிய நாடுகளுக்கு சென்று சட்ட விரோத கும்பங்களிடம் சிக்கி துன்புறும் நிகழ்வு தொடர்வதாகவும் கூறிய அவர், கம்போடியா-தாய்லாந்து-மியான்மர் ஆகிய நாடுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மை கண்டுணர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.