ண்டிகர்

ரியானா மாநில பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பாஜக அரசு அரியானா மாநிலத்தில், முதல்வர் நயாப்சிங் சைனி தலைமையிலான ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர்.இதில்  பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சைகள் மற்றும் லோக்தளம் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி திரும்பப் பெற்றது.  எனவே 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சோம்பிர் சங்வான், ரந்திர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகியோர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

எனவே அரியானா பாஜக அரசுக்கு அறுதிப்பெரும்பான்மைக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உதவ தயாராக இருப்பதாக ஜனநாயக ஜனதா தளம் கட்சி அறிவித்தது.

ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு ஜனநாயக ஜனதா தளம் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா எழுதியுள்ள கடிதத்தில், அரியானாவில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியிருப்பதாகவும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே அரியானாவில் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.