சென்னை: வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கபாதையை தவிர மற்ற சுரங்க பாதைகளில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருவதாக சென்னை   மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதோடு வடகிழக்குப் பருவமழையும் தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து,   சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், அதையொட்டி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்தது. இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் சென்னையில் உள்ள பல சுரங்க பாதைகள் மற்றும் பல இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள்  புகுந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். சாலை, சுரங்கப் பாதைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இன்று காலை 6மணி நிலவரப்படி, சி.பி சாலை சுரங்கப்பாதை, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம், எம்.ஆர்.டி.எஸ் சுரங்கப்பாதைகளில் ஆகிய 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு   அங்கு தேங்கி உள்ள  நீரை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த நிலையில்,  சுரங்க பாதைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னை வியாபார்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சுரங்க பாதை தவிர மற்ற சுரங்க பாதைகளில் போக்குவரத்து நடைபெற்று வருவதாக தெரிவித்து உள்ளது. கணேசபுரம் சுரங்கபாதை மட்டுமே  மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.