சென்னை: அதிகனமழை  பெய்யும் என தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்-ஐ இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. 16ந்தேதி வரை மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது.   கடந்த மாதம் 29 தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.   சென்னையில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது.   காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் அடைந்துள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. இருந்தாலும், தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

இந்த கனமழை மழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், ராணிப்பேட்டை, திருச்சி, நீலகிரி , பெரம்பலூ,ர் கரூர் ,தஞ்சாவூர், சேலம், தர்மபுரி, கோவை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி ,திருப்பத்தூர் , மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

கனமழையின் காரணமாக தமிழகத்தில்   நேற்று 29 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.