டில்லி

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையச் செய்ய வேண்டியது என்ன என ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வந்த முறை மாற்றியமைக்கப்பட்டு தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. சிறிதளவு இறங்கி பலமடங்கு ஏற்றம் கண்டு வருகிறது. கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிதமான விலையில் இருக்கிறபோதும், நம் நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பாரத ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை கூட்டம் குறித்த குறிப்புக்களை தற்போது வெளியிட்டுள்ளது.  அந்த கூட்டங்களில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசிய பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக சக்திகாந்த தாஸ் தனது உரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்தும் அவற்றைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும்  தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவை பின் வருமாறு :

“நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றான பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் கடந்த சில நாட்களாக மலை போல உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை சில மாநிலங்களில் ரூ.100க்கு விற்பனையாகிறது. விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சா எண்ணெய் விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது பாதி விலைக்கே கச்சா எண்ணெய் விற்பனையாகிறது. ஆனாலும், பெட்ரோல் மீது ரூ.33, டீசல் மீது ரூ.32 வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது அதன் அடிப்படை விலைகளைவிடவும் அதிகம்.

மத்திய பாஜக அரசு டீசல் மீது 820, பெட்ரோல் மீது 250 சதவீதத்துக்கு மேலாகக் கலால் வரியை உயர்த்தியுள்ளதாகக் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் கடந்த ஆறரை ஆண்டுகளில் ரூ.21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.

மத்திய அரசின் வரிகளைத் தவிர மாநில அரசுகளும் தங்களது பங்கிற்கு வரிகளை விதித்துள்ளது. பெட்ரோல் மீது 60 சதவீதமும், டீசல் மீது 54 சதவீதத்துக்கு அதிகமாகவும் மத்திய, மாநில அரசுகள் வரி விதித்துள்ளன. இவை அனைத்தும் பொதுமக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நுகர்வோர் விலை குறியீடு (உணவு, எரிபொருள் தவிர) 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது அதிக அளவிலான மறைமுக வரிகள், குறிப்பாகச் சரக்கு, சேவைகள், போக்குவரத்து, சுகாதார சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கத் தொடங்கியதே அதற்குக் காரணம்

பொருளாதாரத்தில் விலை உயர்வால் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குச் செயல்திறன் மிக்க விநியோக செயல்பாடுகள் தேவை, பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் சில மாநிலங்கள் தங்கள் மாநில வரியைக் குறைத்து வருகின்றன. அதன்படி, அசாம், மேற்குவங்கம், மேகாலயா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்கள் தற்போது வரை மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்துள்ளன. இதனால், அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. அதேபோல், மத்திய அரசும் வரிக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.