பஞ்ச்குலா
சாமியார் ராம் ரஹிமை தப்பிக்க வைக்க முயன்றதாக அவரது Z + காவலர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாமியார் ராம் ரஹிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்ததே. அவர் சிறைக்கு சென்ற போது அவரது மெய்க்காப்பாளர்கள் ஒரு போலீஸ் அதிகாரியை அடித்ததாக செய்தி வெளியானது. அதன் உண்மையான மற்றும் விரிவான செய்தி இப்போது வெளியாகி உள்ளது.
நீதி மன்றத்தில் இருந்து ஹெலிகாஃப்டருக்கு சாமியார் அழைத்துச் சென்ற போது அவரது மெய்க்காவலர்கள் ஆக உள்ள Z + செக்யூரிட்டிகள் ஆறு பேர் ஒரு வாகனத்தில் பின் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரை அழைத்துச் சென்ற வாகனத்தின் முன்பு இந்த வாகனத்தை குறுக்காக நிறுத்தி விட்டு காவல்துறை வாகனத்தில் உள்ள சாமியாரை உடனடியாக தங்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
தடுத்த ஐ பி எஸ் அதிகாரியை அடித்துத் தாக்கி உள்ளனர். மேலும் முன்னால் செல்லும் மற்ற காவலர்களை இந்த வாகனத்தை ஏற்றிக் கொன்றுவிட்டு தங்களுடன் சாமியாரை அனுப்பி வைக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர். அவர்களை போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மெய்க்காவலர்கள் சாமியாருக்கு கடந்த ஏழு வருடங்களாக காவலுக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆகும்
விசாரணையில் இந்த காவலர்களும் அவருடைய பக்தர்களில் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. போலீசார் இந்த சம்பவத்தை அவர்கள் வேறு யாரும் செய்யச் சொன்னதால் செய்திருக்கலாமோ என்னும் கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். பெயர் தெரிவிக்க விரும்பாத காவல் அதிகாரி ஒருவர் இந்த மெய்க்காவலர்களில் ஒருவர் அந்த ஐபிஎஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.