வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கு திமுக சொல்லும் காரணம் ஏற்புடையது அல்ல, வன்னியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தி வரும் திமுக அரசு இடஒதுக்கீடு மூலம் அவர்கள் பிரதிநித்துவம் பெறுவதை விரும்பவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளது பொய்யான தகவல்.

கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு புள்ளிவிவரங்களின் மூலம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவித்த ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று திமுக கூறுவதை பாமக-வும் வன்னியர் சங்கமும் ஏற்காது என்று தெரிவித்தார்.

இடஒதுக்கீட்டிற்காக மாபெரும் போராட்டங்களை நான் நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி விரைவில் மாபெரும் போராட்டம் அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.