சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான  வேட்புமனு தாக்கல்  முடிவடைந்து திமுகவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அதிமுகவைச்சேர்ந்த 2 பேர் என மொத்தம் போட்டியிட்ட  6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக ஆதரவு கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்காக தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலக கூடுதல் செயலா் சுப்பிரமணியம் தோ்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா்.

திமுக சாா்பில் மீண்டும்  பி.வில்சனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதுமுகமாக  கவிஞா் சல்மா, சிவலிங்கம் ஆகியோருடன் கூட்டணி கட்சியான  மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசகுப்ழும்  வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதுபோல,  , அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கல் நேற்று(திங்கள்கிழமை) மாலையுடன் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 13 போ் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது. இதில் திமுகவின் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், அதிமுகவின் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பொதுவாக ராஜ்யசபா தேர்தல் ஒரு வேட்புமனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் முன்மொழிவு கடிதம் இல்லாததால் அனைத்து சுயேச்சைகளின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் எதிர்த்து யாருமே போட்டியிடாததால், வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். மனுக்களைத் திரும்பப்பெற வாய்ப்பு வரும் 12-ம் தேதி மாலை 3 மணி வரை   நேரம் இருப்பதால், அதுவரை வெற்றி குறித்து அறிவிப்பு வெளியிடப்படாது.  . அதன்பின்னா் போட்டியிருந்தால் 19-ம் தேதி தோ்தல் நடைபெறும். போட்டி இல்லையெனில் ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தற்போது, இவர்கள் 6 பேரும் எதிர்ப்புகள் இன்றி வெற்றிபெறுவது உறுதியாக உள்ளது.