டெல்லி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஜாதி குறித்து முன்னாள் மத்தியஅமைச்சரும், தற்போதைய பாஜக எம்.பியுமான  அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்த தெரிவித்துள்ள பாஜக தலைமை இது நகைச்சுவையாக  இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி ஜோக் அடிக்கிறது என்றும் கூறியுள்ளது.

மக்களைவையில்  பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதம் நடைபெற்றது.  அதன்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவரான  ராகுல்காந்தி, ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் கூறிய  பாஜக  எம்பி அனுராக் தாக்கூர், ராகுல் காந்திக்கு ஜாதி எதுவென்று தெரியாது  ஜாதி தெரியாதவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்  என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதற்கு பதில் கூறிய ராகுல்காந்தி ,”நீங்கள் என்னை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் நான் கவலைப்படமாட்டேன். உங்களை மன்னிப்பு கேட்கவும் சொல்ல மாட்டேன் ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான சட்டம் கொண்டு வருவோம் என கூறினார்.

இதுதொடர்பான விவாதம் மற்றும் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து விமர்சனம் செய்தது கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ராகுல் காந்திக்கு ஜாதி எதுவென்று தெரியாது என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியிருந்த வீடியோவை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார். அதில்,  “முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும்” என பதிவிட்டு இருந்தார்.

நாட்டின் பிரதமரே இப்படி செய்யலாமா.. என எதிர்கட்சிகள்  கடுமையாக சாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து,  பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் புகார் அளிக்க காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது,  பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி  மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

அதில்,   “ஜாதிக் கணக்கெடுப்பு கோரிக்கைக்காக எஸ்சி/எஸ்டி/ஓபிசி சமூகங்களை இழிவுபடுத்திய” அனுராக் தாக்கூரின் உரையை பிரதமர் மோடி பாராட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், நடைமுறை விதிகளின் விதி 222ன் கீழ் பிரதமருக்கு எதிராக  உரிமை மீறல் கொண்டு வரப்படும்.  அத்துடன், காங்கிரஸ் நடவடிக்கைகளின் பதிவுகளையும், தாக்கூரின் வீடியோவின் மோடியின் ட்வீட்டையும் சமர்ப்பித்தது,

இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள பாஜக,  இது, இண்டியா  கூட்டணியின் அழுக்கு அரசியலை அம்பலப்படுத்துகிறது. “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சாதி குறித்த தெளிவு இல்லாதது குறித்து அவர் பேசியதுதான் தாக்கூரின் பேச்சுக்கு  காரணம், என்றும்,   இருப்பினும், பாஜக எம்பி யாரையும் குறிப்பிடாததால்  அதன்மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தாலும்  அது செல்லுபடியாகும் என்று கருத முடியாது”. ஏனெனில் தாக்கூரின் கருத்துகளின் பகுதிகள், மக்களவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படவில்லை,   இந்த விஷயத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவே  இறுதி முடிவு என்று கூறப்படுகிறது.