டெல்லி

ஹத்ராஸ் சென்று மதநிகழ்வு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.

 

 

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.

இங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சத்சங்க நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

மூத்த சேவகரான தேவ்பிரகாஷ் மதுகருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும், அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அலிகார் ஐ.ஜி. ஷலப் மாத்தூர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம்,

“இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹத்ராசில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடுவார்”

என்று கூறி இருந்தார்

அதன்படிஇன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்