டெல்லி : ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை, பாஜக எம்.பி.க்களுக்கு எதிராகத்தான் பேசினார், அவரது சகோதரியும்,  உ.பி. மாநிலஎ காங்கிரஸ் பொதுச் செயலாளருமான  பிரியங்கா வக்காலத்து வாங்கி உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மக்களவையில்  பேசும்போது,  பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் இந்துக்களின் பிரதிநிதி இல்லை என்றும் இந்து தர்மத்தை பாஜக பின்பற்றவில்லை என்றும் கூறியிருந்ததுடன், இந்துக்கள் வண்முறையாளர்கள் என்று பேசியிருந்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  அவரின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ராகுலின் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ராகுல்மீதான இமேஜ் தகர்ந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், சில காங்கிரஸ் தலைவர்கள், ராகுலின் பேச்சை  ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிராக பேசியது போன்று பாஜகவினர் திரித்து கூறுவதாக  தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, ராகுலுக்காக அவரது சகோதரி பிரியங்கா வாத்ரா வக்காலத்து வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,   தமது சகோதரர் (ராகுல்)  இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை என்றும் அவர் வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் பேசினார் என்று கூறியிருப்பதுடன்,  ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் என்ன பேசினார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  “பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை உடனே நிறுத்த வேண்டும்” என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி! தமிழிசை கடும் கண்டனம்…