ராமநாதபுரம்: இளையான்குடி அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த சமூக ஆர்வலரை ஒரு கும்பல் காரில் கடத்தி, கத்தியால் கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் உயரதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் இந்தஅசம்பாவிதம் அரங்கேறி உள்ளது.
ஏற்கனவே புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக பேட்டி கொடுத்த அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி என்பவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் அரங்கேறி உள்ளது. சமூக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் என்பவர் மணல் கடத்தல் கும்பலால் காரில் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (35). சமூக ஆர்வலரான இவர் சாலைக்கிராமம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல், மண் கடத்தல் குறித்து அடிக்கடி அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் தாகவல் தெரிவித்து, மணல் கடத்தல் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதனால் சட்டவிரோதமாக மண், மணல் குவாரி நடத்தியோருக்கு இடையூறு ஏற்பட்டது.
இதுதவிர ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதும், அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்களை பெற்றும் வந்தார். அவருக்கு அரடிசயில் கட்சியினரால் அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மா (வியாழக்கிழமை) இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் அருகேயுள்ள சாத்தனூரில் பள்ளி விழா முடித்துவிட்டு, ஆசிரியர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே வந்தபோது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆசிரியரை விட்டுவிட்டு, ராதாகிருஷ்ணனை கடத்திச் சென்றது.
இதுகுறித்து ஆசிரியர் அந்த பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார். மேலும் போலீசிலும் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த சாலைக்கிராமம் போலீஸார் காரை தேடி வந்தனர். இதனிடையே அந்த கும்பல் ராதாகிருஷ்ணன் காரில் வைத்து கடுமையாக தாக்கிவிட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றது.
இதை கண்ட அங்கே இருந்த சிலர் கடுமையாக தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராதாகிருஷ்ணனை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் நேரில் விசாரித்தார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் புகாரின்பேரில் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன், பாலுச்சாமி, கார்த்தி, தாளையடிகோட்டையைச் சேர்ந்த கவி (எ) புகழ், மணி ஆகிய 5 பேர் சாலைக்கிராமம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ராதாகிருஷ்ணன், “சாலைக்கிராமம் பகுதியில் 3 அடி கீழே மணல் கிடைக்கிறது. இதனால் 3 அடிக்கு கீழே மண் அள்ள கடந்த 2020-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளேன். ஆனால் அதையும் மீறி இரவு, பகலாக மணல் அள்ளி கடத்தினர். இதுகுறித்து வருவாய்த்துறையினர், போலீஸாருக்கு புகார் அனுப்பினேன். அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எனக்கு அச்சுறுத்தல் வந்தது.
இதையடுத்து எனக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் உயரதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். நடவடிக்கை இல்லாத நிலையில் என்னை கடத்தி தாக்கியுள்ளனர். ஏற்கெனவே 2023-ம் ஆண்டு ஒரு கும்பல் கடத்தி தாக்கியது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மீண்டும் என்னை தாக்கியதால் எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்” என்றார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடத்தப்பட்ட தகவல் தெரிந்ததும் நாங்கள் பின்தொடர்ந்தோம். இதை அறிந்துதான் கடத்தல் கும்பல் அவரை கடுமையாக தாக்கிவிட்டு, காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளது என்றனர்.
ஜகபர் அலி கொலைக்கு அரசு அதிகாரிகள் உடந்தை? காவல்ஆய்வாளர், தாசில்தார், விஏஓ பணியிடமாற்றம்….