ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

23 வயதான இந்திய மாணவர் சரண்ப்ரீத் சிங் மற்றும் அவரது மனைவியும் ஜூலை 19ம் தேதி இரவு 9:20 மணிக்கு நகரின் மையப்பகுதியில் உள்ள கிந்தோர் அவென்யூ அருகே காரை நிறுத்திவிட்டு அங்கு நிறுவப்பட்டிருந்த அலங்கார விளக்குகளைப் பார்க்கச் சென்றனர்.

அப்போது அவர்கள் அருகே வந்த காரில் இருந்து இறங்கிய ஐந்து நபர்கள் சரண்ப்ரீத் சிங்கிடம் அவரது காரை எடுக்கச் சொல்லியுள்ளனர்.

இதற்கு சரண்ப்ரீத் சிங் மறுப்பு எதுவும் தெரிவிக்காத போதும் அந்த இளைஞர்கள் தாங்கள் கொண்டுவந்த கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கத் துவங்கினர்.

மேலும், அவரை இந்தியர் என்று தரக்குறைவான வார்த்தைகளில் (‘f*** off, Indian’) திட்டியும் உள்ளனர்.

ராயல் அடிலெய்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரண்ப்ரீத் சிங்குக்கு மூளை அதிர்ச்சி, முகத்தில் பல எலும்பு முறிவுகள், மூக்கு உடைப்பு மற்றும் கடுமையான கண் காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர் மீதான இந்த தாக்குதல் இனவெறி தாக்குதலாக கருதப்படும் நிலையில் அவர் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.